செந்தமிழ்சிற்பிகள்

க.வெள்ளைவாரணனார் (1917-1988)

க.வெள்ளைவாரணனார் (1917-1988)

 அறிமுகம்

தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

இளமை

தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் ஓர் கைக்கோள செங்குந்தர் குடும்பத்தில் கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மையார்[1] தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

பணி

1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.

சிறப்புகள்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985 இல் கலைமாமணி விருதை வழங்கியது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு இலக்கியம் மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.

  • சித்தாந்தச் செம்மல்
  • தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்
  • திருமுறை உரைமணி
  • செந்தமிழ்ச் சான்றோர்
  • தமிழ்மாமணி
  • சிவகவிமணி
  • திருமுறைத் தெய்வமணி
  • தமிழ்ப் பேரவைச் செம்மல்
  • ஆகிய விருதுகள் பல்வேறு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்டன.

மறைவு

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.